Tuesday, September 11, 2012

பலூனில் கேமராவை பறக்க விட்டு பூமியை படம் பிடித்து வாலிபர் சாதனை

லண்டன்: "பல நூறு கோடி ரூபாய் செலவில், செயற்கை கோளை, விண்ணில் செலுத்தி, பூமிப் பந்தை விதம் விதமாய், படம் எடுக்கும் வேலை, அமெரிக்காவின், நாசா விஞ்ஞானிகளுக்கு, மட்டுமே சாத்தியம்' என யாரும் இனி, கூற முடியாது.

காயலான் கடையில் வாங்கிய, பழைய கேமரா, உயரமாக செல்லக் கூடிய ஒரு பலூன், என, வெறும், 18 ஆயிரம் ரூபாய் செலவில், இச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார், பிரிட்டனை சேர்ந்த இளைஞர்.பிரிட்டனில் உள்ள, வோர்செஸ்டர் பகுதியில், ஒம்பர்ஸ்லி நகரை சேர்ந்தவர், ஆடம் கட்வொர்த், 19. பொறியியல் படிப்பில், ஆரம்பக் கட்டத்தை தாண்டாதவர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், கேமராவை, பலூனில் வைத்து, பறக்க வைக்கும் முயற்சியில், ஒருவர், ஈடுபட்டதை பார்த்திருந்தார் ஆடம். அந்த சம்பவத்தை, கடந்த சில நாட்களாக, அசை போட்டு வந்த ஆடமுக்கு திடீரென, அதையே சாதித்து காட்டினால் என்ன என்று தோன்றியது.

உடனே செயலில் இறங்கினார். காயலான் கடைக்கு சென்று, 2,500 ரூபாய் மதிப்பில் ஒரு கேமராவை வாங்கினார். பின், கார்களில் பயன்படுத்தப்படும், ஜி.பி.எஸ்., கண்காணிப்பு கருவியையும், அதன் மூலம் சிக்னல்களை அனுப்பும், ரேடியோ டிரான்ஸ்மிட்டர் கருவியையும், மைக்ரோ பிராசசர் கருவியையும் வாங்கினார்.பின், இரண்டு மீட்டர் நீளம் கொண்ட, 30 கி.மீ., உயரத்தை தாண்டி, பறக்கக் கூடிய வலிமையான ரப்பர் பொருளால் ஆன, பலூனையும், சூரிய ஒளியை மின்சக்தி ஆக்கும் சோலார் பேனல்களையும் தேடிப் பிடித்து வாங்கினார்.

கேமராவையும், சிறிய வீடியோ கேமரா ஒன்றையும் பாதுகாப்பாக, ஒரு பெட்டியில், பொருத்தினார். இதனுடன், மற்ற கருவிகளை இணைத்து, 40 மணி நேர, கடும் உழைப்புக்கு பின், புதியதோர் சாதனத்தை உருவாக்கி, பின், அதை, பலூனில் பாதுகாப்பாக பொருத்தினார்.எல்லாம், திருப்திகரமாக முடிந்த பின், பலூனை, விண்ணில் செலுத்தினார். இரண்டரை மணி நேரமாக பறந்த பலூன், பூமியில் இருந்து, 33 கி.மீ., உயரத்தை சென்றடைந்தது. அங்கிருந்தவாறே, பூமிப் பந்தை, பல கோணங்களில் படம் எடுத்து தள்ளின, ஆடம் செலுத்திய கேமராக்கள்.அதன் பின், சிறிது நேரத்தில், பலூன், வெடித்து சிதறியது. கேமராக்கள் கொண்ட பெட்டி, பூமியை நோக்கி, மணிக்கு, 250 கி.மீ., வேகத்தில் பாய்ந்து வந்து விழுந்தது.

ஜி.பி.எஸ்., கருவியின் துணையுடன், ரேடியோ டிரான்ஸ்மிட்டர் அனுப்பிய சிக்னல்களை கொண்டு, தன் வீட்டில் இருந்து, 45 கி.மீ., தொலைவில், பிராட்வே என்ற இடத்தில், விழுந்து கிடந்த கேமரா பெட்டியை எடுத்து, அதில் இருந்த படங்களை பார்த்தார் ஆடம்.நம்ப முடியாத வகையில், அக் கேமராவில், பூமியை, பல்வேறு கோணங்களில், எடுக்கப்பட்ட படங்கள், பதிவாகி இருந்தன.
நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட பூமி படங்களுக்கு, ஆடம் கேமரா, எடுத்த படங்கள் எந்த வகையிலும், குறைவில்லாத வகையில் இருந்தன.
                                                                                               Thank you : www.dinamalar.com

No comments:

Post a Comment

comments ...pls